பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி?எவ்வாறு திருத்தம் செய்வது?
பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி?
எவ்வாறு திருத்தம் செய்வது?
வீட்டுக்குப் புதுவரவாக என்ட்ரி கொடுக்கும் மழலைகளுக்கு அரசின் முதல் அங்கீகாரம் பிறப்புச் சான்றிதழ் (Birth certificate). அந்தக் குழந்தையின் எதிர்காலம் முழுமைக்கும் முக்கிய ஆவணமாக இந்தச் சான்றிதழே உடன்வரும். அப்படிப்பட்ட பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி? எவ்வாறு திருத்தம் செய்வது?
இது சம்பந்தமாக பிறப்பு-இறப்பு பதிவுத்துறை அதிகாரியளித்த பதில்:
“குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறும் வழிமுறைகள் அனைத்தும் 1-1-2018- க்குப் பிறகு https://crstn.org/birth_death_tn/ என்ற இணையத்தள பக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு குறித்து தகவல் அளித்திட, ஒவ்வொரு மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரிகள், ஊராட்சி என்றால் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்றால் அதற்குரிய அலுவலர்கள், அரசு மருத்துவனை என்றால் அங்குள்ள பிறப்பு - இறப்பு பதிவாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பிறப்பு - இறப்பு அலுவலர் குழந்தையின் பிறப்பை உறுதி செய்து http://crstn.org/birth_death_tn/ என்ற தமிழக அரசின் பிறப்பு-இறப்பு பதிவு இணையதளத்தில் பதிவு செய்வார். அதன் பின் பெற்றோர்கள் crstn.org என்ற இணையதளம் மூலம் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணைக்க வேண்டியவை :
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு கிராம சுகாதார செவிலியரால் கொடுக்கப்படும் ஆர்.சி.ஹெச் எண் ( R.C.H - Reproductive child health number) பெற்றோர்களின் ஏதேனும் ஓர் அடையாள அட்டை
பெயருடன் கூடிய சான்றிதழ்
குழந்தைப் பிறந்து, தாய் மருத்துவமனையை விட்டுச் செல்வதற்கு முன்பாகவே பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதால் நிறைய பெற்றோர் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை குழந்தைகளின் பெயரின்றி பதிவிறக்கம் செய்கிறார்கள். குழந்தையின் பெயருடன் கூடிய சான்றிதழைப் பெறுவதற்கு, குழந்தைப் பிறந்த ஓராண்டுக்குள் இணையத்தில் விண்ணப்பித்து பெயரைப் பதிவுசெய்து சான்றிதழ்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கும் எந்தக் கட்டணமும் வாங்கப்படுவதில்லை.
2018-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கான சான்றிதழில் இன்னும் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரைத் தொடர்புகொண்டு, உரிய ஆவணங்களை வழங்கி, பெற்றோரின் உறுதிமொழி விண்ணப்பத்துடன் பெயர் பதிவு செய்திட விண்ணப்பிக்க வேண்டும்.
திருத்தங்கள் எப்படி மேற்கொள்வது?
குழந்தைகளின் பெயர்களை எக்காரணம் கொண்டும் பிறப்புசான்றிதழில் மாற்றம் செய்ய இயலாது. ஏதேனும் எழுத்துப்பிழைகள் இருப்பின் மாற்றம் செய்துகொள்ளலாம். குழந்தைகளின் பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள உங்கள் பகுதியில் உள்ள பிறப்பு -இறப்பு பதிவாளரை அணுகி மனு கொடுக்க வேண்டும்.
ஆவணங்களைச் சரிபார்த்து பிழைகள் இருக்கும் பட்சத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பிறப்பு -இறப்பு அதிகாரி நடவடிக்கை மேற்கொள்வார்.
பிறப்பு சான்றிதழ் தொலைந்தால்?
2018-க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் இணையதளத்தில் டிஜிட்டல்/pdf வடிவில் எப்போதும் இருக்கும். அதனால் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு இந்தப் பிரச்சனையே கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எத்தனை முறை பதிவிறக்கம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் க்யூ.ஆர் கோடுடன் கூடிய அசல் சான்றிதழ்களே உங்களுக்குக் கிடைக்கும்.
ஆனால் 2018-க்கு முன் பிறந்த குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ்களை நீங்கள் தொலைத்துவிட்டால், நீங்கள் இதற்கு முன் பிறப்பு சான்றிதழை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளரிடம் மீண்டும் மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழின் நகல் (ஜெராக்ஸ் காப்பி) இருந்தால் நல்லது. நகல் இல்லையென்றால் குழந்தை பிறந்த தேதி, பிறந்த இடத்தைக் கூறி மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் குழந்தை எந்த ஊர் மருத்துவமனையில் பிறக்கிறதோ அந்த ஊர் பிறப்பு - இறப்பு பதிவாளர் மூலம்தான் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் வசிப்பிடத்தில் இருந்து குழந்தைகளின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://crstn.org/birth_death_tn/# என்ற இணையதள முகவரியையோ அல்லது 102 அல்லது 104 என்ற உதவி எண்களையோ தொடர்புகொள்ளலாம்.
சான்றிதழ்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்
உங்கள் குழந்தையின் வயதிற்கான ஆதாரம் பிறப்புச் சான்றிதழ்தான். பள்ளியில் சேர்க்க, ஆதார் எண் பெற, ஒட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் பெற, வாக்களிக்கும் உரிமை பெற என எல்லாவற்றுக்கும் பிறப்புச் சான்றிதழ் அவசியம் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். சான்றிதழ்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எல்லா ஒரிஜினல் சான்றிதழ்களையும் ஒரு காப்பி (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக் கொள்வதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி : விகடன்
#AKV #அடியற்கை_கல்வி_வழிகாட்டி
#birthcertificate
Comments
Post a Comment